உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு: தென்கொரியா, இத்தாலியில் பலி உயருகிறது


உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு: தென்கொரியா, இத்தாலியில் பலி உயருகிறது
x

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தென்கொரியா மற்றும் இத்தாலியில் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சியோல்,

சீனாவில் தினந்தோறும் உயிர் பலிகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 28 நாடுகளில் பரவியிருக்கிறது. இதில் குறிப்பாக தென்கொரியா மற்றும் இத்தாலியில் இந்த நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக தென்கொரியா உள்ளது. அங்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதே போல் இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 229 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஜப்பானில் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த 80 வயது முதியவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கொரோனா வைரசுக்கு பலியான கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story