கிழக்கு கடலில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை- நேரில் பார்வையிட்ட கிம்


வட கொரிய அதிபர் கிம் ஜாங் : Photo Credit: AP
x
வட கொரிய அதிபர் கிம் ஜாங் : Photo Credit: AP
தினத்தந்தி 3 March 2020 4:58 AM GMT (Updated: 3 March 2020 6:46 AM GMT)

கிழக்கு கடலில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சியோல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய போர்த் திறன் வாய்ந்த ஆயுதம் குறித்து வட கொரியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை தொடர்ந்து முதன் முறையாக இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் கிழக்கு கடற்கரை நகரமான ஒன்சனிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டது என தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்கள் (ஜே.சி.எஸ்) அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை எந்த வகை, அதன் வரம்பு மற்றும் உயரம் உள்ளிட்ட பிற விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. கூடுதல் ஏவுகணைகள் ஏவப்படுகிறதா என எங்கள் இராணுவம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது மற்றும் தயார் நிலையில் இருக்கிறது என்று ஜே.சி.எஸ் தெரிவித்துள்ளது.

பியோங்யாங்கின் அதிகாரப்பூர்வ ரோடோங் சின்முன் ஊடகம் பல  ராக்கெட்டுகளின் புகைப்படங்களையும், புகைமூட்டத்துடன் ஒரு தீவின் இலக்கையும் வெளியிட்டு உள்ளது

இந்த சோதனையை  வட கொரிய அதிபர் கிம் நேரில் பார்வையிட்டு உள்ளார்.  முகமூடி அணிந்த அதிகாரிகளுடன் ராணுவம் நடத்திய அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார். 

அங்கு பேசும் போது கிம் கூறியதாவது:-

வெற்றி சக்திவாய்ந்த இராணுவ சக்தி மற்றும் ஒரு போர் தடுப்பு ஆகியவற்றால் உறுதி செய்யப்படுகிறது. எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் நாட்டின் வானம், நிலம் மற்றும் கடல் ஆகியவற்றைப் பாதுகாக்க மக்கள் இராணுவம் முழு போர் தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும் என கூறினார்.

அமெரிக்கா அல்லது தென் கொரியா குறித்து கிம் எந்த நேரடி கருத்துக்களையும்  குறிப்பிடவில்லை.

வட கொரியா தனது இராணுவத்தில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்காக ராணுவ வீரர்கள் கூட்டமாக  பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்து உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

2019 நவம்பர் 28க்குப் பிறகு வட கொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். கடந்த ஆண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வட கொரியா 13 முறை ஏவுகணைகளை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story