இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி - பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர்


இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி - பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர்
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 10:51 PM GMT)

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆகிறார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் ஆளும் லிகுயிட் கட்சியும், எதிர்க்கட்சியான பென்னி காண்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சியும் தலா 35 இடங்களில் வெற்றி பெற்றன. 120 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து செப்டம்பரில் மறுதேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பென்னி காண்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களையும், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுயிட் கட்சி 32 இடங்களையும் வென்றன. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஈடுபட்டும், அதில் வெற்றி கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக அங்கு மார்ச் மாதம் 2-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், கொரோனா வைரஸ் பீதிகளுக்கு நடுவிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது முந்தைய இரு தேர்தல்களைக் காட்டிலும் அதிகம் ஆகும்.

ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான லிகுயிட் கட்சி கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்தது. இது பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

ஏனெனில் 120 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்கள் கிடைத்தால் தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்து விடும். எனவே தனிப்பெரும்பான்மைக்கு ஒரு இடம் மட்டுமே குறைவாக கிடைக்கும் என்ற நிலையில் அவர் எளிதாக ஆட்சி அமைத்து விடலாம்.

ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள், பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுயிட் கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

நேற்று 91 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் லிகுயிட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன.

எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆவதில் சிக்கல்கள் இருக்காது என்று இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தேர்தலில் நல்லதொரு வெற்றி கிடைத்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “எல்லா முரண்பாடுகளையும் கடந்து வெற்றி பெற்றுள்ளோம். இஸ்ரேல் நாட்டை நாங்கள் வல்லரசாக மாற்றி உள்ளோம்” என கூறினார்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.


Next Story