வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 March 2020 3:46 AM GMT (Updated: 9 March 2020 10:42 PM GMT)

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சியோல்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. இதனால், அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார்.

இதனால் இருநாட்டு தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த வாரம் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது.

இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதித்தது கொரிய தீபகற்பத்தில் பதற்றதை அதிகப்படுத்தி இருக்கிறது.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரையோரம் ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தென்கொரியாவுக்கு ஆறுதல் தெரிவித்து அந்த நாட்டு அதிபர் மூன் ஜே இன்னுக்கு கிம் ஜாங் அன் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதிய சில நாட்களில் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story