ஆப்கானிஸ்தானில் தலீபான் வெறிச்செயல்: 7 போலீசார் சுட்டுக்கொலை


ஆப்கானிஸ்தானில் தலீபான் வெறிச்செயல்: 7 போலீசார் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 March 2020 11:15 PM GMT (Updated: 15 March 2020 11:15 PM GMT)

ஆப்கானிஸ்தானில், தலீபான்களால் 7 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் கைதிகள் 5 ஆயிரம் பேரை விடுதலை செய்யும் ஆணையில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அண்மையில் கையெழுத்திட்டார்.

எனினும் முதற்கட்டமாக 1,500 கைதிகள் மட்டும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு பின்னர் மற்ற 3,500 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 1,500 கைதிகளை விடுவிப்பதில் ஆப்கானிஸ்தான் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் மாகாணம் ஜாரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு நேற்று அதிகாலை போலீஸ் உடையில் வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் போலீஸ்காரர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தலீபான் பயங்கரவாதிகளே தாக்குதலுக்கு காரணம் என மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜாமல் பாரிக்சாய் தெரிவித்துள்ளார்.


Next Story