ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்


ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான  மருந்து தயாராகி விடும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
x
தினத்தந்தி 18 March 2020 4:56 PM GMT (Updated: 18 March 2020 4:56 PM GMT)

ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 165-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8228 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் பாதிப்பு 1 லட்சத்து 98 ஆயிரத்து 412 ஆக உயர்ந்தது.  இவர்களில், 82 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து விட்டதாகவும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுவரை 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா பரவியுள்ளது. அந்த நாட்டின் நியூயார்க், வாஷிங்டன் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. பலி எண்ணிக்கை 100-யை கடந்து 116 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.

உலக முழுவதும் கோர முகத்தை காட்டும் கொரோனா வைரசுக்கு எதிராக  தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் யார் முதலில் மருந்து கண்டுபிடிப்பது என்ற போட்டி ஜெர்மனி-அமெரிக்காவிடையே நிலவி வருகிறது.

இந்தசூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவீட்  செய்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான  மருந்து தயாராகி விடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “கொரோனா பாதிப்புக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடித்து வந்தாலும் அமெரிக்கா முன்னிலையில்  உள்ளது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.

ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும். ஒரு ஆண்டு நீடிக்கும் சோதனையை, சில நாட்களிலேயே முடித்திருக்கிறோம். மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.


Next Story