கொரோனா பீதியில் உலகம்: வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!


கொரோனா பீதியில் உலகம்:  வழக்கம் போல்  ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!
x
தினத்தந்தி 21 March 2020 1:53 AM GMT (Updated: 21 March 2020 1:57 AM GMT)

உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், இது எதையும் கண்டுகொள்ளாமல் ஏவுகணைகள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.

பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. 

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. 

இதனால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார். இதனால் இருநாட்டுத் தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

கொரோனா பீதியைக் கண்டுகொள்ளாத வடகொரியா

தற்போது உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த  சில தினங்களுக்கு முன்  குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், சிறிய ரக ஏவுகணைகள் சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் 2 சிறிய ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக  கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Next Story