தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும்; டாக்டர் எச்சரிக்கை


தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும்; டாக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 10:47 PM GMT (Updated: 23 March 2020 10:47 PM GMT)

தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும் என டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 122 ஆகும். ஏற்கனவே 668 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியாகி விட்டார். இதுபற்றி பாங்காக் நகர கவர்னர் அஸ்வின் குவன்முவங்க் கூறுகையில், “எனது கோரிக்கையை ஏற்று பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளர்கள். அவர்களுக்கு நன்றி. கடந்த 3 நாட்களில் 10 சதவீதம் பேர் தாய்லாந்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டவர்” என்றார்.

மகிடோல் பல்கலைக்கழக டீன் டாக்டர் பிரசித் வட்டன்பா விடுத்த எச்சரிக்கையில், “கொரோனா தொற்று என சந்தேகப்படுபவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தாமல், மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். அரசு அறிவுரைகளை ஏற்காவிட்டால் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சமாக உயரும். 7 ஆயிரம் பேர் பலியாகி விடுவார்கள். 17 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். மருத்துவர்கள் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் கவனிப்பாரற்ற நிலைக்கு போய்விடுவார்கள். முக கவசம் அணிந்து மிக அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். தற்போதுள்ள நிலைமை முழுமையாக சீரடைவதற்கு 9 மாதங்கள் ஆகும்” என்றார்.


Next Story