கிரேட்டா தன்பெர்க்குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?


கிரேட்டா தன்பெர்க்குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?
x
தினத்தந்தி 26 March 2020 12:00 AM GMT (Updated: 25 March 2020 11:47 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்டாக்ஹோம், 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதனை தவிர்க்க உலக நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் சுவீடனை சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கிரேட்டா தன்பெர்க், ’பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?‘ என ஆக்ரோஷமாக முழங்கினார். இதன் மூலம் கிரேட்டா தன்பெர்க் உலக அளவில் அனைவராலும் பேசப்படும் நபராக உருவெடுத்தார்.

இந்த நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தான் அண்மையில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் பயணம் முடிந்து சொந்த நாட்டிற்கு வந்த பிறகு மிகவும் சோர்வு அடைந்ததோடு, உடலில் நடுக்கம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தொண்டையில் வறட்டு தன்மை மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் 2 வாரங்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரை கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என்றும், அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது நிச்சயம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவே தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story