கொரோனாவைரஸ் தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு


கொரோனாவைரஸ் தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு
x
தினத்தந்தி 29 March 2020 9:29 AM GMT (Updated: 29 March 2020 9:29 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உரிய புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்து உள்ளது.


கோலாலம்பூர்

மலேசியாவில் இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் 
பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர்  வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.

கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு 
செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.

கொரோனாநோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக சுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story