கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்
x
தினத்தந்தி 2 April 2020 9:29 AM GMT (Updated: 2 April 2020 9:29 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி உள்ளன.

 இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,238 ஐ எட்டியுள்ளதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்புகளில் மிகப்பெரிய உயர்வு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நோயால் 32 பேர் இறந்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தானில் ஊரடங்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள் இந்த நோயைக் கட்டுப்படுத்த துடிக்கின்றனர், பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.ஆனால் மக்கள் இதுவரை அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுத்து வருகின்றனர். அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகின்றனர். ஆனால் வெகுஜனங்களிடையே எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மசூதிகள் மூடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் பாகிஸ்தானில் லட்சம்  பேர் கூடிய ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, இது சார்ஸ்-கோவி -2 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டில் அதிகாரிகள் கடைப்பிடித்த மெத்தன அணுகுமுறையைக் காட்டுகிறது.

சவூதி அரேபியாவும் ஈரானும் மசூதிகள் மூடப்படுவதாக அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இன்னும் அத்தகைய முடிவை எடுக்கவில்லை. 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்து வருகிறது. சிந்து மற்றும் பலூசிஸ்தானில் உள்ள மாகாண அரசாங்கங்களைத் தவிர, வேறு எந்த பிராந்திய அரசாங்கமும் வழிபாட்டுத் தலங்களை மூட முடிவு எடுக்கவில்லை.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், பெரும் பேரழிவு இனிமேல்தான் நிகழக்கூடும். இம்ரான் கான் தனது அணுகுமுறையாலும், தாமதமான நடவடிக்கைகளாலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வாய்ப்பைப் பாகிஸ்தான் ஏற்கெனவே தவறவிட்டுவிட்டது என்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள். 

பாகிஸ்தானிய ஊடகங்கள் ஜமாத்-இ-இஸ்லாமியின் பொதுச் செயலாளர் லியாகத் பலூச் அறிக்கையை மேற்கோளிட்டு, நாட்டில் ஊரடங்கை  விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பிரதமர் “குழப்பமடைந்துள்ளார்” என்று கூறி உள்ளன

கொரோனா நோய் கட்டுப்படுத்தப்படாமல் பரவுவதைவிட, நாட்டின் பொருளாதாரத்துக்கும், சமூகத்தின் ஏழை மக்களுக்கும் மிகப் பெரிய பேரழிவு வேறு இல்லை. பாகிஸ்தானில் சமூகப் பரவல் அதிகரித்துவருவது அதற்கான அறிகுறியைத்தான் காட்டுகிறது.

Next Story