ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்டு
ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அல்ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நவாஸ் ஷெரீப் மீதான மேலும் பல ஊழல் வழக்குகளை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடைமை முகமை (என்.ஏ.பி) தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1986-ம் ஆண்டு, நவாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது அவர் மீது தொடரப்பட்ட நிலம் தொடர்பான ஊழல் வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த மாதம் 27-ந்தேதி நவாஸ் ஷெரீப்புக்கு என்.ஏ.பி. நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருப்பதால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நிலம் தொடர்பான ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story