கொரோனா விவகாரம்: அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை


கொரோனா விவகாரம்: அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 May 2020 12:30 PM GMT (Updated: 6 May 2020 12:30 PM GMT)

கொரோனா தொடர்பில் சீனா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெய்ஜிங்

கொரோனா தொடர்பில் சீனா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கை அறிக்கையை சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது.

சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் கடும்போக்கு கடந்த 1989 ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவத்திற்கு பின்னர் இருந்ததைவிட தற்போது கடுமையாக உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.இதன் விளைவாக உலகின் இரு முக்கிய சக்திகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் எதையும் வெளியிட அதிகாரிகள் தரப்பு மறுத்து வருகின்றனர்.இந்த முக்கிய அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சிஐசிஐஆர் (CICIR) என்ற பிரபல நிறுவனம் தயார் செய்துள்ளது.அந்த அறிக்கையின் சுருக்கமான பகுதி வெளியிடப்பட்டாலும், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அந்த அறிக்கையின் முக்கிய அம்சம் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1980 காலகட்டம் வரை சீனா அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கி வந்த இந்த சிஐசிஐஆர் தற்போது இந்த அறிக்கை தொடர்பாக எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்துள்ளது. இதில் இருந்தே, அந்த அறிக்கையின் தீவிரம் மற்றும் தற்போதைய சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் மன நிலை தொடர்பில் புரிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, சிஐசிஐஆர் நிறுவனத்தின் அறிக்கையை சீனா அதி முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொண்டதுடன், சீனா இரு முக்கிய முடிவுகளுக்கும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் முக்கியமாக நாட்டின் பாதுகாப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு என்பது பல தசாப்தங்களாக மோசமான நிலையில் காணப்படுகின்றன.சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் தொடர்பில் நீடிக்கும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளும், ஹாங்காங், தைவான் மற்றும் தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சைகளும் இரு நாடுகளை மோதல் போக்கிலேயே வைத்துள்ளன.

மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து  கடும் சிக்கலை எதிர்கொள்ளும் டொனால்டு டிரம்ப்,சமீப நாட்களாக சீனாவை குறிவைத்து வருவதுடன், கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் சீனா மட்டுமே எனவும் குற்றஞ்சாட்டியும் வருகிறார்.ஆனால் சீனாவின் சமீப கால வளர்ச்சியை பொறுக்காமல், அமெரிக்கா வேண்டும் என்றே தங்கள் நாட்டை குற்றஞ்சாட்டுவதாக சீன மக்கள் நம்புகின்றனர்.

சீனாவின் வளர்ச்சி மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் என அமெரிக்கா கருதுவதாக சீன மக்கள் நம்புகின்றனர் என நாளேடு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.



Next Story