பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 40 பேர் பலி


பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 40 பேர் பலி
x
தினத்தந்தி 6 May 2020 1:42 PM GMT (Updated: 6 May 2020 1:42 PM GMT)

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லாமாபாத், 

சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. 

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 40 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 40 பேர் பலியாகினர். இது கொரோனா தொற்றுக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும். மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 22,413 ஆக அதிகரித்துள்ளது. 

பஞ்சாப் மாகாணத்தில் 8,420 பேருக்கும், சிந்துவில் 8,189 பேருக்கும், கைபர்-பக்துன்க்வாவில் 3,499 பேருக்கும், பலூசிஸ்தானில் 1,495 பேருக்கும், இஸ்லாமாபாத்தில் 485 பேருக்கும், கில்கிட்-பால்டிஸ்தானில் 386 பேருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 76 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,32,582 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story