கொரோனா அச்சுறுத்தலால் போலந்து அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு


கொரோனா அச்சுறுத்தலால் போலந்து அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 May 2020 12:41 AM GMT (Updated: 8 May 2020 12:41 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போலந்து நாட்டில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வார்சா, 

கொலைகார கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் போட்டி உள்பட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடான போலந்தில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

போலந்தில் தற்போது வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் போலந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

எனினும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தலைமையிலான அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போலந்தில் வருகிற 10-ந் தேதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் அதிபராக ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன.

அதுமட்டும் இன்றி ஊரடங்கால் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்காது என்றும் சர்வதேச நோக்கர்கள் கவலை தெரிவித்தனர்.

ஆனால் ஆளும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி கட்சி, தேர்தலை நடத்தி ஆண்ட்ரேஜ் துடாவை மீண்டும் அதிபராக்குவதில் மும்முரம் காட்டியது.

அதே சமயம் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

எனினும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், தபால் ஓட்டு மூலம் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த மாதம் தென்கொரியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Next Story