ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 May 2020 2:31 AM GMT (Updated: 8 May 2020 2:31 AM GMT)

ஆப்பிரிக்காவில் போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.  இவற்றில் அமெரிக்காவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.  12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கா பிரிவு 47 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டு உள்ளது.  இதுபற்றி அந்த அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொயத்தி அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதிய அளவு மேற்கொள்ளவில்லை எனில், நோய் தொற்று ஏற்பட்ட முதல் ஆண்டில் ஆப்பிரிக்காவில் பலி எண்ணிக்கை 83 ஆயிரம் முதல் 1 லட்சத்து 90 ஆயிரம் வரை செல்ல கூடும்.

இதுவே பாதிப்பு எண்ணிக்கையானது 2.9 முதல் 4.4 கோடி வரை செல்ல கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆனது, உலகம் முழுவதும் உள்ளது போன்று மடங்காக பெருகாவிட்டாலும், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மெல்ல பரவும் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆப்பிரிக்காவில் அடுத்த பல ஆண்டுகளுக்கு அன்றாட வாழ்வில் ஒரு பிரச்னையாக கொரோனா பாதிப்பு மாற கூடும்.  அதனால் பல நாட்டு அரசுகளும் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.  நாம் கொரோனா பாதிப்பு பற்றி சோதனை செய்து, கண்டறிந்து, தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

Next Story