சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 பேருக்கு தொற்று


சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 May 2020 7:25 AM GMT (Updated: 18 May 2020 7:25 AM GMT)

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா கணிசமாக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், கடந்த சில தினங்களாக  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

ஹூபெய் மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில்,  உகான் நகரில் 14  பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உகான் நகரில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 337- ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், ஜிலின் மாகாணத்தில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. ஜிலின் மாகாணத்திலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,954-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 82 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை  4,634 -பேர் பலியாகியுள்ளனர். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது கடும் சவாலாக இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.  

காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா இருக்கும் நபர்களால், பிற நபர்களுக்கு பரவுவது அதிகரிப்பதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சீனாவில்  உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டன. பள்ளிகளும் இயங்கத்தொடங்கியுள்ளன.

Next Story