ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல்


ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 19 May 2020 9:30 PM GMT (Updated: 19 May 2020 9:10 PM GMT)

ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது.

இதன் காரணமாக ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா உள்பட பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பச்சை மண்டல பகுதியில் நேற்று காலை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகள் பச்சை மண்டல பகுதிக்குள் விழுந்து வெடித்ததாகவும், இதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக கடந்த 6-ந்தேதி தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது 3 ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story