‘சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும்’ - உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கெடு


‘சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும்’ - உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கெடு
x
தினத்தந்தி 19 May 2020 10:30 PM GMT (Updated: 19 May 2020 9:37 PM GMT)

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோதல் தொடர்பாக, சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுவதை நிரூபித்து காட்டாவிட்டால் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என கூறி உள்ளது.

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. 48 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இதன் பாதிப்பு உள்ளது. மேலும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் இந்த தொற்று பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் ஊரடங்கு போட்டுள்ளதால், பொருளாதாரம் முடங்கிப்போய் உள்ளது. தொழில், வணிகம் இதுவரை இல்லாத பாதிப்பை சந்தித்து வருகிறது,

ஆனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று கூறும் அமெரிக்கா, அந்த அமைப்புக்கு ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,750 கோடி) நிதி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

அது மட்டுமின்றி, உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளியிடாமல் சீனா மூடி மறைத்ததில் உலக சுகாதார நிறுவனத்தின் பங்கையும் ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காட்டமாக ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

4 பக்க அளவிலான இந்த கடிதத்தை டிரம்ப் நேற்று முன்தினம் இரவு தனது ‘டுவிட்டர்’ பக்கத்திலும் வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

சீன அதிபர் ஜின்பிங், கொரோனா வைரஸ் பற்றிய ரகசியங்கள் மற்றும் மூடி மறைப்பு விமர்சனங்களை நிராகரித்துள்ளார். நாங்கள் இணைந்து செயல்பட்டோம், கொரோனா வைரசை கட்டுப்படுத்த வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புணர்வுடன் செயல்பட்டோம். உலக சுகாதார நிறுவனத்துக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் நாங்கள் மிகச்சரியான நேரத்தில் தகவல் அளித்தோம் என்று கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதில் நடவடிக்கை எடுப்பதில் நீங்களும், உங்களது அமைப்பும் மீண்டும் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால், உலகம் அதற்கான கடும் விலையை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், உலக சுகாதாார நிறுவனத்துக்கு உள்ள ஒரே வழி, அந்த அமைப்பானது சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்டுவதுதான்.

உலக சுகாதார நிறுவனத்தில் எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது குறித்து உங்களிடம் எங்களது நிர்வாகம் ஏற்கனவே விவாதிக்க தொடங்கி உள்ளது. ஆனால் இதில் விரைவான நடவடிக்கை தேவை. நேரத்தை வீணாக்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் முக்கிய முன்னேற்றங்களுக்கு உறுதி அளிக்கவில்லை என்றால், அதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை, அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் எனக்கு இருக்கிறது. நீங்கள் இதை செய்யவில்லை என்றால் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வருகிற நிதியை நிரந்தரமாக நிறுத்துவேன். இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக இருப்பதை மறுபரிசீலனை செய்வேன்.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை, தற்போதைய நிலையில், அமெரிக்காவின் நலன்களுக்கு உகந்தபடி சேவையாற்றாத நிறுவனத்துக்கு வழங்குவதை தொடர முடியாது.

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த சுதந்திரமான விசாரணையை அனுமதிக்க சீனாவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்க உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் சொந்த அவசர குழு ஒப்புதல் அளித்தும் அது செய்யப்படவில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் டிரம்ப் கூறி உள்ளார்.

Next Story