கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மலேரியா மருந்து சாப்பிடுகிறேன்: டிரம்ப் அறிவிப்பு


கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மலேரியா மருந்து சாப்பிடுகிறேன்: டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 11:15 PM GMT (Updated: 19 May 2020 10:03 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

வாஷிங்டன், 

உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் மலேரியா காய்ச்சல் நிவாரணத்துக்காக வழங்கப்படக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை கொல்வதாக தகவல்கள் வெளிவந்தன.

இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்புகிறார்.

இதற்காக அவர் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு இந்த மாத்திரைகளை பெருமளவில் அனுப்பி வைக்கும்படி கேட்டார். அந்த மாத்திரைகள் மீதான ஏற்றுமதி தடையை இந்தியாவும் விலக்கிக்கொண்டு பல கோடி மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்த மாத்திரை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு வேலை செய்வதில்லை, இந்த மாத்திரைகளை கொடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகள் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இந்த மாத்திரைகளை கொடுத்தும் பலர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வு தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அவற்றை ஜனாதிபதி டிரம்ப் ஏற்கவில்லை.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை தடுப்பதற்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பேட்ரிஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பெரிய அளவில் 2 ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

நியூயார்க்கில் 1,400 நோயாளிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதே போன்று பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்களால் 84 நோயாளிகளுக்கு இந்த மருந்து தந்து சோதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி மேலும் 97 பேருக்கு இந்த மாத்திரைகள் தந்து சோதிக்கப்பட்டது. வழக்கமான பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதிலும் இந்த மாத்திரைகளால் பெரிய அளவில் பலன் இல்லை என தெரிய வந்தது.

சீனாவிலும் 150 பேருக்கு இந்த மாத்திரைகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா வைரஸ், இந்த மாத்திரைகளால் சாகின்றன என்பதற்கான அறிகுறிகள் இல்லை. மாறாக பக்க விளைவுகள்தான் ஏற்பட்டன என தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்புக்கு தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். இத்துடன் துத்தநாக சப்ளிமென்டும் எடுத்துக்கொள்கிறேன்.

என்னை இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்யவில்லை. ஆனால் இந்த மாத்திரைகளை வழங்குமாறு வெள்ளை மாளிகை டாக்டரை நான் கேட்டுக்கொண்டேன். அதை எடுத்துக்கொள்ளவும் செய்கிறேன். இது நல்லது என்று கருதித்தான் சாப்பிடுகிறேன். இந்த மாத்திரை பற்றி பல நல்ல தகவல்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நன்றாகத்தான் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் மரணம் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) எச்சரித்து இருக்கிறது. அதையும் உதாசீனப்படுத்திவிட்டு டிரம்ப் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Next Story