ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - ராணுவ வீரர்கள் மோதல் 18 பேர் சாவு


ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - ராணுவ வீரர்கள் மோதல் 18 பேர் சாவு
x
தினத்தந்தி 21 May 2020 7:30 PM GMT (Updated: 21 May 2020 7:17 PM GMT)

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

சனா,

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருவதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஏமனில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் அங்கு இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு மாகாணம் பேடாவில் உள்ள கனியா நகரில் ராணுவ வீரர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் இந்த மோதலில் 14 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அதே சமயம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர். அதே போல் இருதரப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

Next Story