ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு
ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மாஸ்கோ,
ரஷியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜெலெனோடோல்க் நகரில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ஆஸ்பத்திரியில் இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகள் அலறியடித்தபடி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினர். ஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். முன்னதாக கடந்த 13-ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story