கொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு: 8 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகள் முடியும்


கொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு: 8 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகள் முடியும்
x
தினத்தந்தி 24 May 2020 11:15 PM GMT (Updated: 24 May 2020 9:17 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு ரஷியா ஒரு மருந்து கண்டு பிடித்துள்ளது. இந்த மருந்து மீதான மருத்துவ பரிசோதனைகள் 8 வாரங்கள் முடிந்து விடும் என தெரிய வந்துள்ளது.

மாஸ்கோ, 

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் ரஷிய நாட்டில் பெரிய அளவில் பரவவில்லை. ஆனால் சமீப காலமாக அங்கு அதிகளவில் பரவி வருகிறது.

நேற்று மதிய நிலவரப்படி ரஷியாவில் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவித்தது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பிற நாடுகளுடன் ரஷியாவும் களத்தில் உள்ளது.

இந்தநிலையில் ரஷியாவில் உளள் பாவிபிராவிர் மருந்து நிறுவனம், ‘அரேப்லிவிர்’ என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டு பிடித்துள்ளது.

இந்த மருந்து குறித்த மருத்துவ பரிசோதனைகள் 4 முதல் 8 வாரங்களுக்குள் முடிந்து விடும் என்று ரஷிய சுகாதார அமைச்சகத்தின் தலைமை சிறுநீரக மருத்துவரும், இந்த மருந்து ஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் உருவாக்கியுள்ள மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்துப்பார்க்கும் மருத்துவ பரிசோதனையை 4 முதல் 8 வாரங்களில் முடித்துக்கொண்டுவிடுவோம். அதன்பின்னர் மருந்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்போம். இந்த மருந்தினை மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்போம். அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், மார்டோவியாவிலும் இந்த மருந்தை கொடுத்து பரிசோதிப்போம்.

முதல் கடடமாக நடுத்தர தீவிரத்தன்மை கொண்ட நோயாளிகளுக்கு கொடுப்போம். தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து இன்னும் பயன்படுத்தப்படவில்லை. முதலில் இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதிருக்கிறது.

ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்குள் இந்த மருந்து உருவாாக்கப்படும் என்பது நிச்சயம். ஆனால் தடுப்பூசி, மருந்து என இரண்டின் கண்டுபிடிப்பிலும் நாங்கள் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது என்று அவர் கூறினார்.

Next Story