கவுரவக்கொலை: தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொலை செய்த தந்தை


கவுரவக்கொலை: தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொலை செய்த தந்தை
x
தினத்தந்தி 27 May 2020 6:27 AM GMT (Updated: 27 May 2020 8:51 AM GMT)

ஈரானில் தந்தை ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான்

ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் தூங்கி கொண்டிருந்த அஷ்ரஃபி என்ற 13 வயது சிறுமியை தந்தை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார்.

மகளை கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எதிர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டில் தனக்கு ஆபத்து இருப்பதாக அஷ்ரஃபி பலமுறை எச்சரித்த போதிலும், காவல்துறையினர் அவரை தந்தையிடம் ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் இச்சம்பவத்தை கவுரவக்கொலை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை ஈரானியர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக கண்டிக்கப்பட்டுள்ளது.தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கின் விவரங்கள் சட்ட நடைமுறைக்கு பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என தலேஷின் ஆளுநர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் பாதுகாவலர் என்பதால் ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், தந்தை கடுமையான தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Next Story