கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்: போலீஸ் அதிகாரி கைது


கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்: போலீஸ் அதிகாரி கைது
x
தினத்தந்தி 30 May 2020 11:00 PM GMT (Updated: 30 May 2020 6:46 PM GMT)

வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன் கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அவரது சாவில் நீதி கேட்டு நாடு மின்னசோட்டா, நியுயார்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இன மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அட்லாண்டாவில் சில இடங்களில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக நேற்று முன்தினம் மாலை போராட்டக்காரர்கள், ஜார்ஜ் பிளாய்டின் புகைப்படங்களை ஏந்தி திரண்டு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை சிறிது நேரம் பூட்டப்பட்டது.

இதற்கிடையே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்த வெள்ளை இன போலீஸ் அதிகாரியான டெரக் சாவின் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் மினியாபொலிஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Next Story