ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து
ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ,
ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தில் உள்ள கதினாவ நகரில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25 ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. வெடிபொருட்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கில் தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் விமானப் படைத்தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
இதையடுத்து விமானப் படை தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story