பாகிஸ்தான் கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 10 ஆக உயர்வு


பாகிஸ்தான் கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 Jun 2020 9:01 AM GMT (Updated: 29 Jun 2020 9:01 AM GMT)

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கராச்சி: 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் இன்று காலை வழக்கம்போல்  பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். 

அலுவலக பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதிகள் எனவும் தெரியவந்துள்ளது.


Next Story