ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா


ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா
x
தினத்தந்தி 30 Jun 2020 5:50 AM GMT (Updated: 30 Jun 2020 5:50 AM GMT)

ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவருகிறது என வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்

சதி வேலைகளால் உலக நாடுகளுக்கு கேடு விளைவித்து வரும் சீனா இப்போது நான்கு பக்கங்களிலிருந்தும் தனித்து விடப்பட்டுள்ளது. சீனாவின் தீங்கு விளைவிக்கும் எண்ணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது சீனாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள தொடங்கி உள்ளன.இன்னும் பல நாடுகள் இந்த நடவடிக்கையை எடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 

இந்திய அரசும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளது. பல சீன மொபைல் செயலிகளை தடை செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும்தனது பாதுகாப்பு உபகரணங்களுக்கான தொழில்நுட்ப பகிர்வை தடை செய்துள்ளது.

அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஹாங்காங் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சீனா அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஹாங்காங்கின் சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகமும் ஹாங்காங் தொடர்பான தனது கொள்கைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. இனி பழையபடி அல்லாமல், இந்த உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பத்தைப் பெற பலவித கெடுபிடிகள் இருக்கும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்  மைக் பாம்பியோ வெளியிட்டு உள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

ஹாங்காங் இரட்டை பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா இன்று முதல் தடை செய்யப்போகிறது.சீனா ஹாங்காங்கை ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற வரையறைக்குள் கருதினால், அமெரிக்காவும் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கிற்கான தனது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான வழங்கலை அமெரிக்கா தடை செய்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஹாங்காங் முழுவதுமாக சீன ஆட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தின் பிடியில் வந்துவிட்டால், தான் செய்யும் பாதுகாப்பு உதவி மூலம் சீன ஆயுத வலிமை அதிகரித்து அது தனக்கோ பிற நாடுகளுக்கோ கேடு விளைவிக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா முன்னெச்சரிக்கையாக உள்ளது.


Next Story