கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் - சீனா தகவல்


கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் - சீனா தகவல்
x
தினத்தந்தி 9 July 2020 11:30 PM GMT (Updated: 9 July 2020 10:03 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சீனா கூறியுள்ளது.

பீஜிங், 

கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், எல்லை முழுவதும் போர் மேகமும் சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருநாட்டு எல்லை பேச்சுவார்த்தையின் சிறப்பு பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.

இதில் எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமுக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6-ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிக்ங், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறி வருவதுடன், அங்கு நிறுவிய கட்டுமானங்களையும் அகற்றி வருகின்றனர்.

இந்த படை விலக்கும் நடவடிக்கைகளை சீனாவும் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரு நாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லை முழுவதும் தற்போது நிலைமை சீராகவும், மேம்பட்டும் வருகிறது.

ராணுவம் மற்றும் தூதரகம் ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்புகளை இரு தரப்பும் தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும் இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி நெறிமுறை சந்திப்பும் மேற்கொள்ளப்படும்.

எல்லை முழுவதும் பதற்ற தணிப்புக்கான ஒருமித்த முடிவுகளை அமல்படுத்துவதிலும், அங்கு அமைதியை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் எங்களுடன் இணைந்து இந்தியாவும் பணியாற்றும் என நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.

இதற்கிடையே லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங் மற்றும் கோக்ராவில் சர்ச்சைக்குரிய இடங்களாக விளங்கிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் முற்றிலும் வெளியேறி விட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பங்கோங் சோ பகுதியின் 4-வது முனை பகுதியில் இருந்தும் குறைந்த எண்ணிக்கையில் சீன படைகள் வெளியேறி வருவதாகவும், அங்குள்ள 4 மற்றும் 8-ம் முனைகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் இருந்து சீன படைகள் முற்றிலும் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லையில் முதற்கட்ட வெளியேறும் பணிகள் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இரு நாட்டு வீரர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் கூட்டு ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், கமாண்டர் மட்டத்திலான 4-வது சுற்று பேச்சுவார்த்தையும் இன்னும் ஓரிரு நாட்களில் நடத்தப்படும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு ஒருபுறம் படைகள் விலக்கல் நடந்து வந்தாலும் மறுபுறம் இருநாட்டு எல்லைப்பகுதியை இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளை ராணுவ வாகனங்கள் எல்லைக்கு எடுத்துச்சென்று வருகின்றன.

Next Story