இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை


இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை
x
தினத்தந்தி 10 July 2020 11:38 AM GMT (Updated: 10 July 2020 11:38 AM GMT)

ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.


சிட்னி

ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார்.

கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.தொடர்ந்து 7 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடும் பயிற்சி 
மேற்கொண்டு வந்த அவரால், துரதிர்ஷ்டமாக உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாமல் போனது.இதனால் மனமுடைந்த கார்மென், ஒரு மாறுதல் தேவை என கருதி, தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தொடர்ந்து குறிப்பிட்ட எந்த பயணத் திட்டமும் இன்றி டெல்லிக்கு புறப்பட்டு சென்ற கார்மென், இமையமலைக்குச் செல்ல உள்ளூரில் உதவியை நாடியுள்ளார்.

அப்போது ஒருவர் கார்மெனிடம், தாம் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என கூறி, ஏமாற்றி காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கே அறிமுகமான நபர், தம்முடன் தங்குவது பாதுகாப்பானது என கூறியதுடன், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு பயணப்படுவதற்கு முன்பு தமது படகு வீட்டில் அந்த இரவு தங்க ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால் அடுத்த சில நாட்களில் தாம் அந்த நபரிடம் சிக்கியுள்ளது கார்மெனுக்கு தெரியவந்தது.அதன் பிறகு 

ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்துள்ளது கார்மெனுக்கு. அந்த நபர் எத்தனை முறை தம்மிடம் அத்துமீறினார் என்பதை கூட தம்மால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாமல் போனது என்கிறார் கார்மென்.இதனிடையே கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலிய தூதரகத்தை தொடர்புகொண்டு தமது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கார்மெனை மிரட்டி அந்த நபர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்ததே, பொலிசாருக்கு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட உதவியாக அமைந்துள்ளது.

இரண்டு மாத காலம் அந்த படகு வீட்டில் கார்மென் பட்ட அவஸ்தைகள் முழுவதையும் அவர் தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த நபருக்கு துஷ்பிரயோக வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தாம் அறிந்ததாக கூறும் கார்மென், இன்னொரு முறை இந்தியா செல்வதை தாம் விரும்பவில்லை என்கிறார்.


Next Story