ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை - 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது
ரஷிய நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது.
மாஸ்கோ,
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இந்தியாவிலும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்தது.
இந்நிலையில், 2-ம் கட்ட பரிசோதனை குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:-
தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 28-ந் தேதிக்குள் அதை முடித்து விடுவோம்.
அதன்பிறகு, எங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம். இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டோம்.
ஆகஸ்டு மாத மத்தியிலேயே சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய தொடங்கும்.
சுகாதார மையங்களில் ரஷிய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புகிறோம். அடுத்த சில மாதங்களுக்கு மருந்தகங்களில் இது கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story