அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் - டிரம்ப் நிர்வாகம் தகவல்


அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் - டிரம்ப் நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 14 July 2020 7:03 PM GMT (Updated: 14 July 2020 7:03 PM GMT)

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ‘ஜெட்’ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது.

அமெரிக்காவில் தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகளை பல மாகாணங்களும் அறிவித்த நிலையில் தொற்று மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கியது.

இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி, ஸ்டான்போர்டு மருத்துவ கல்லூரியுடன் ஒரு இணையதள வழி கருத்தரங்கில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் இப்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாடு ஒரு போதும் முழுமையாக மூடப்படாததே இதற்கு காரணம். ஆமாம், நாம் ஒரு போதும் முழுமையாக மூடப்பட முடியாது. நீங்கள் மூடினீர்கள். ஆனால் உடனே படிப்படியாக திறக்கத்தொடங்கி விட்டீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் முடிவைக்கூட அமெரிக்கா காணத்தொடங்கவில்லை.

இதற்கு சாத்தியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. எப்படியும் பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்து மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம்.

இதை டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் தெரிவித்தது.

இதுபற்றி அந்த டி.வி.சேனல் மேலும் கூறுகையில், “சுகாதார அதிகாரிகளும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கோடை காலத்தின் இறுதியில் (ஆகஸ்டு மாத தொடக்கம்) தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி விடலாம் என தெரிவித்து இருப்பதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவு அடைவதற்கு முன்பாகவே அதன் உற்பத்தி தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என கூறியது. இன்னும் 4 முதல் 6 வார காலத்தில் இந்த தடுப்பூசி உற்பத்தி பணி தீவிரமாக நடக்கும் எனவும் அது தெரிவித்தது.

அமெரிக்காவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் 30 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை உருவாக்கும் வகையில் ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை கூட்டாக இணைந்து கடந்த மே மாதம் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.

நவம்பர் 3-ந் தேதி ஜனாாதிபதி தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிற டிரம்ப் நிர்வாகம், சுகாதாரத்துறையையும், விஞ்ஞானிகளையும், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் முடுக்கி விட்டுள்ளது.

Next Story