மாலியில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 19 பேர் பலி


மாலியில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 19 பேர் பலி
x
தினத்தந்தி 30 July 2020 12:01 AM GMT (Updated: 30 July 2020 12:01 AM GMT)

மாலியில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர்.

பமாகோ, 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனாகாபா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்த்திசையில் பாய்ந்தது.

அப்போது சாலையில் எதிரே வந்த லாரியின் மீது இந்த பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story