சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு


சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்;  சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 July 2020 7:20 AM GMT (Updated: 31 July 2020 7:20 AM GMT)

சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.

மாஸ்கோ

உலகில் சீனாவிற்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்றால், அது ரஷியாவும், வடகொரியாவும் தான். அமெரிக்கா எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்துள்ளது.ஆனால், தற்போது இதில், சீனாவிற்கும், ரஷியாவிற்கும் இடையே நிலைமை மோசமடைந்து வருகிறது.

ஏனெனில், கொரோனா பாதிப்பு இருந்த போதே ரஷியா, சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. ஆனால் பெரிய அளவில் எதுவும் கூறாமலும், கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்றும் கூறாமாலும், ஏதோ குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பது போல் கூறி வந்தது.அப்போதில் இருந்தே, ரஷியா, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று திட்டவட்டமாகவும் ரஷியா கூறியது.

இதனால், சீனா-ரஷியா இடையே இருந்த பல்லாண்டு உறவு, முறிய துவங்கியது.ரஷியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை கண்டு கோபம் அடைந்த சீனா ரஷியா மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியது. அதன் காரணமாக, ரஷியாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.

இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷியா கைப்பற்றியது. இதை சீனா மீண்டும் கேட்க துவங்கியுள்ளது.இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷியா இதை அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷியா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரச்சாரம் செய்து வருகிறது.

சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ரஷியா, சீனாவிற்கு அனுப்ப வேண்டிய ஏவுகணைகளை அனுப்ப முடியாது என்று மறுத்து உள்ளது. அதாவது, சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை ரஷியா வழங்குவதாக கூறியிருந்தது, இந்த பிரச்சினைக்கு பின் இப்போது அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது.

திடீர் என்று சீனாவிற்கு இந்த ஏவுகணைகளை விற்க போவதில்லை. அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. ரஷியாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ரஷியாவின் இந்த முடிவு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ரஷியா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.இந்த இரண்டு பிரச்சினைக்கும் முக்கிய காரணம், சீனாவின் உளவாளி ஒருவர் ரஷியாவில் பிடிப்பட்டதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவின் ஆர்டிக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் சீனாவின் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.இவர் ரஷியாவில் இருந்து முக்கியமான உளவு தகவல்களை சீனாவிற்கு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷிய அரசு குறித்த ரகசியங்களை இவர் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.

இது ரஷியாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில், முக்கியமாக முன்னாள் உளவாளியான புதினை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு நட்பு நாட்டிற்குள் உளவாளியை அனுப்புவது ஏன் பெரிய விஷயம் என்பது புதினுக்கு தெரியும். இந்த நிலையில் மொத்தமாக சீனாவுடன் உறவை முறிக்க புதின் தயாராக இருப்பதாக செய்தி வெளியானது.

இதையடுத்து அந்த உளவாளி பிடிபட்டது குறித்து சீனா அளித்த விளக்கம் மேலும் புதினை கோபப்படுத்தியுள்ளது. நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகவே அவரை அனுப்பினோம், ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை, எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை செய்தோம் என்று சீனா கூறியுள்ளது.இதனால் புதின் சீனா விஷயத்தில், நிச்சயமாக ஒரு முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story