ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 1 Aug 2020 12:08 AM GMT (Updated: 1 Aug 2020 12:08 AM GMT)

ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவின் கிழக்கு பகுதியில் சீன நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் கபரோவ்ஸ்க். இந்த நகரின் ஆளுநராக இருந்த செர்ஜி புர்கல், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல தொழில் அதிபர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஆளுநர் பதவியும் பறிக்கப்பட்டது.

செர்ஜி புர்கலின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கபரோவ்ஸ்க் தொடர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த நகரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.

இந்த நிலையில் கபரோவ்ஸ்க் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8.45 மணிக்கு விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் அங்குலம் அங்குலமாக சோதனையிடப்பட்டது. இதில் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதன் பின்னரே இது வெடிகுண்டு என்பது தெரியவந்தது. கபரோவ்ஸ்க் நகர விமான நிலையத்துக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது 2 வாரத்தில் இது 4-வது முறையாகும்.

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்துக்கும் ஆளுநருக்கு ஆதரவான போராட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் அந்தக் கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story