கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு; 6 தொழிலாளர்கள் பலி


கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு; 6 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 1 Aug 2020 10:42 PM GMT (Updated: 1 Aug 2020 10:42 PM GMT)

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

போகோடா,

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எல் ஜூலியா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சுரங்கத்துக்குள் கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். எனினும் தொழிலாளர்கள் 6 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 3 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இதே எல் ஜூலியா நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story