பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள்


பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள்
x
தினத்தந்தி 5 Aug 2020 4:27 PM GMT (Updated: 5 Aug 2020 4:27 PM GMT)

பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பெய்ரூட்

லெப்னான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014ஆம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

இங்கு நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 கி.மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை  100க்கும் அதிகமாக உயிர் இழந்து உள்ளனர். 4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

வெல்டிங் செய்யும் ஒருவரால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப்பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

வீடியோவில், பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் தற்போது அதனை வெளியிட்டுள்ளார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.




Next Story