பாறை மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: மொரீஷியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு


பாறை மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: மொரீஷியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு
x
தினத்தந்தி 9 Aug 2020 11:41 PM GMT (Updated: 9 Aug 2020 11:41 PM GMT)

பாறை மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில், மொரீஷியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு ஏற்படுள்ளது.

போர்ட் லூயிஸ், 

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் கடந்த மாதம் 25-ந் தேதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் அரசு இறங்கியது. மேலும் நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது. இதனிடையே கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை. பெட்ரோல் கசிவு மோசமடைந்து வருகிறது. அதன்படி தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கசியும் பெட்ரோலால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்த நாடு கவலை தெரிவித்துள்ளது. மொரீஷியஸ் உணவு மற்றும் சுற்றுலாத்துக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது. இது உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story