பெய்ரூட் வெடிவிபத்து: மக்கள் போராட்டம் எதிரொலி: லெபனான் அரசு பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு


பெய்ரூட் வெடிவிபத்து: மக்கள் போராட்டம் எதிரொலி: லெபனான் அரசு பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 6:07 PM GMT (Updated: 10 Aug 2020 6:07 PM GMT)

பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தில் மக்கள் நடத்திய போராட்டம் எதிரொலியாக, லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் அறிவித்துள்ளார்.

பெய்ரூட், 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.

இந்த கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. அதனைத் தொடர்ந்து பெய்ரூட் முழுவதும் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெய்ரூட் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கியதோடு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதன் காரணமாக வெடி விபத்தால் ஏற்கனவே நிலைகுலைந்து உள்ள பெய்ரூட் நகரம் கலவர பூமியாக காட்சியளித்தது. 

இந்நிலையில் மக்களின் இந்த போராட்டம் எதிரொலியாக லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் தியாப் அறிவித்துள்ளார். 

லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஹாசன் தியாப் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. .  

Next Story