பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்


பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
x
தினத்தந்தி 14 Aug 2020 6:39 AM GMT (Updated: 14 Aug 2020 7:08 AM GMT)

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இஸ்லாமாபாத்,

பிரிட்டிஷ் ஆட்சி முடிவு பெற்று கடந்த 1947 ஆம் வருடம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் விடுதலை பெற்றன. அதுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கி வந்த பாகிஸ்தான், விடுதலைக்கு பின்னர் தனி நாடாக பிரிந்து சென்றது. முகமது அலி ஜின்னாவின் தலைமையில் அனைத்து இந்திய முஸ்லிம் லீக் அமைப்பின் தீவிர முயற்சியால் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சுதந்திரமான இஸ்லாமிய தேசம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம் 1947-ன் படி, வடக்கு பாகிஸ்தான்(தற்போதைய பாகிஸ்தான்), கிழக்கு பாகிஸ்தான்(தற்போதைய வங்காளதேசம்) மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டன.

நள்ளிரவில் விடுதலை வழங்கப்பட்டதால்  இஸ்லாமிய காலண்டரின் ரமலான் மாதம் 27 ஆம் தேதியை சுதந்திர தினமாக பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. இதனை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் பலர் சுதந்திர தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். நாளை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாகிஸ்தானியர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு டுவிட்டர் வலைதளத்தில் “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Next Story