தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறுகிறது - அரசு அதிகாரிகள் கவலை


தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறுகிறது - அரசு அதிகாரிகள் கவலை
x
தினத்தந்தி 16 Aug 2020 12:01 AM GMT (Updated: 16 Aug 2020 12:01 AM GMT)

தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறுகிறது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சியோல், 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் முதன் முதலில் தென்கொரியாவில்தான் பரவியது. அங்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 900 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.

எனினும் மக்கள் புழக்கம் அதிகரித்ததன் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையை எட்டி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 103 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 166 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது அந்த நாட்டில் கடந்த மார்ச் 11-ந் தேதிக்கு பிறகு ஒரு நாளில் பதிவான அதிக பாதிப்புகள் ஆகும்.

இதன் காரணமாக தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி வருவதாக அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்றைய பாதிப்புடன் சேர்த்து தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் அங்கு இதுவரை 305 பேரின் உயிரை பறித்துள்ளது.

Next Story