சீனாவின் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவு


சீனாவின் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவு
x
தினத்தந்தி 16 Aug 2020 12:29 AM GMT (Updated: 16 Aug 2020 12:29 AM GMT)

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சீனாவின் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன், 

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் தொடர்ந்து டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதன்படி அடுத்த 90 நாட்களுக்குள் டிக்-டாக் நிறுவனத்துக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து விதமான சொத்துகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story