கொரோனா அச்சம்; இந்திய கலாசாரத்திற்கு மாறிய இரு நாட்டு அதிபர்கள்


கொரோனா அச்சம்; இந்திய கலாசாரத்திற்கு மாறிய இரு நாட்டு அதிபர்கள்
x
தினத்தந்தி 21 Aug 2020 7:56 AM GMT (Updated: 21 Aug 2020 7:56 AM GMT)

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிபர்கள் சந்தித்தபொழுது கொரோனா அச்சத்தினால் வணக்கம் தெரிவித்து கொண்டனர்.

பாரீஸ்,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

இதேபோன்று பல நாட்டு தலைவர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.  வெளிநாட்டு தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளும்பொழுது மரியாதைக்காக கைகுலுக்கி கொள்வது வழக்கம்.  ஆனால் கொரோனா வைரசால், இந்த மரபு பின்பற்றப்படுவதில் அச்சமேற்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்பொழுது, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வணக்கம் செலுத்தும் முறையை பின்பற்ற தொடங்கினர்.

இதுபற்றி நேதன்யாகு கூறும்பொழுது, கைகுலுக்குவதனை தவிருங்கள்.  வணக்கம் கூறும் இந்திய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.  என்னை போல் வணக்கம் தெரிவியுங்கள்.  அல்லது கைகுலுக்காமல் ஏதேனும் ஒரு வழியை கண்டுபிடியுங்கள் என கூறினார்.

ஐரீஷ் நாட்டு பிரதமர் லியோ வராட்கரை வரவேற்கும்பொழுது, டிரம்பும் வணக்கம் தெரிவிக்கும் முறையை பின்பற்றினார்.  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் லண்டனில் மக்களை சந்திக்கும்பொழுது வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலானது நினைவுகூரத்தக்கது.

இதேபோன்று ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.  அவரை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய கலாசார முறையை பின்பற்றி வணக்கம் கூறினார்.  பதிலுக்கு மெர்கல்லும் வணக்கம் தெரிவித்து கொண்டார்.

அதிபர் மேக்ரானின் இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில், கொரோனா பாதிப்பு, பெலாரஸ் நாட்டில் தேர்தலுக்கு பின்னான அமைதியின்மை மற்றும் துருக்கி நாட்டுடனான பதற்ற நிலை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Next Story