அமெரிக்காவை மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாக்குவேன் - ஜனாதிபதி டிரம்ப் சூளுரை


அமெரிக்காவை மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாக்குவேன் - ஜனாதிபதி டிரம்ப் சூளுரை
x
தினத்தந்தி 29 Aug 2020 12:30 AM GMT (Updated: 28 Aug 2020 4:57 PM GMT)

அமெரிக்காவை வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடாக உருவாக்குவேன் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அண்மையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்தபடி குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது சக அமெரிக்கர்களே, இன்றிரவு நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடனும் நிறைந்த இதயத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான இந்த பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 4 ஆண்டுகளில் உங்களின் ஆதரவோடு நம்பமுடியாத முன்னேற்றத்தை எங்களால் கொண்டுவர முடிந்தது. அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவோம். நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்த தேர்தல்தான் முக்கிய தேர்தலாக இருக்கப்போகிறது. அமெரிக்கர்களின் நலன் காக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல். அனைத்து எதிர்ப்புகளையும், ஆபத்துகளையும் கடந்து நாம் மீண்டும் உயரத்தை எட்டுவோம். சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா அல்லது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

நான் மீண்டும் ஜனாதிபதியானதும் அமெரிக்காவை வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடாக உருவாக்குவேன். அமெரிக்கா விரைவில் முழு வேலைவாய்ப்புக்கு திரும்பும்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Next Story