15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்


15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
x
தினத்தந்தி 12 Sep 2020 11:45 PM GMT (Updated: 12 Sep 2020 10:30 PM GMT)

அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

டோக்கியோ, 

ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள மியாகி நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியாகி நகர் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள 17 நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நில நடுக்கங்கள் ஏற்பட்டன. அந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.1, 4.2 மற்றும் 5.0 புள்ளிகளாக பதிவாகின. 

முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னரும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து பல மணி நேரமாக வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் பொழுதை கழித்தனர்.

அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

Next Story