பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்


பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்
x
தினத்தந்தி 16 Sep 2020 7:45 PM GMT (Updated: 16 Sep 2020 7:25 PM GMT)

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம், 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா நகரில் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்டூட் நகர் மீது நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி தளம் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவற்றின் மீது போர் விமானம் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.


Next Story