ஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்


ஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால்  உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை  - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
x
தினத்தந்தி 17 Sep 2020 12:04 AM GMT (Updated: 17 Sep 2020 12:04 AM GMT)

ஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.  ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிற நாடுகளும் சோதனைகளை நிறுத்தின. 

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கம் செய்யப்பட்டது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டத்தையடுத்து இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையை ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதேபோல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனை மீண்டும் துவங்கியுள்ளது. 

இதற்கிடையே, தன்னார்வலருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு கோவிட் 19  தடுப்பூசி சோதனை காரணமாக இருக்காது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story