சீனாவின் டிக்டாக், வீசாட் செயலிகளை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்கா திட்டம்


சீனாவின் டிக்டாக், வீசாட் செயலிகளை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்கா திட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2020 1:14 PM GMT (Updated: 18 Sep 2020 1:14 PM GMT)

சீனாவின் டிக்டாக், வீசாட் செயலிகளை மக்கள் பயன்படுத்துவதற்கு வரும் 20ந்தேதியில் இருந்து தடை விதிக்க அமெரிக்க வர்த்தக துறை திட்டமிட்டு உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து  கூறிவருகிறது.

இந்த நிலையில், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமுடைய வீடியோக்களை பகிரும் செயலியான டிக்டாக் மற்றும் செய்திகளுக்கான செயலியான வீசாட் ஆகியவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்வதற்கு வரும் 20ந்தேதியில் இருந்து தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த உத்தரவை இன்றே பிறப்பிக்கவும் அமெரிக்க வர்த்தக துறை திட்டமிட்டு உள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story