பிற நாடுகளிடம் இருந்து ‘கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை’


பிற நாடுகளிடம் இருந்து ‘கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை’
x
தினத்தந்தி 18 Sep 2020 10:29 PM GMT (Updated: 18 Sep 2020 10:29 PM GMT)

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

பீஜிங்,

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டு தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை சீன ஹேக்கர்கள் திருடி உள்ளதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் தடுப்பூசி தகவல்களை பல நாடுகள் திருடியிருப்பதாகவும், இதில் சீனாவும், ரஷியாவும் முக்கிய இடம் வகிப்பதாகவும் ஸ்பெயின் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘சைபர் தாக்குதல்கள் மற்றும் சைபர் குற்றங்களை சீனா கடுமையாக எதிர்ப்பதுடன், அதை எதிர்த்து போராடியும் வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. எனவே தடுப்பூசிக்காக எந்தவித சட்ட விரோத நடவடிக்கையும் எங்களுக்கு தேவையில்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.

இதைப்போல சீனா தயாரித்த 11 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனையில் இருப்பதாகவும், அதில் 4 தடுப்பூசிகள் 3-ம் கட்ட சோதனையில் இருப்பதாகவும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் கூறியுள்ளார். அதேநேரம் ஸ்பெயின் விஞ்ஞானிகள் சில தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதில் ஒன்றுகூட மனித பரிசோதனையை எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story