ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது இங்கிலாந்து அழகி ; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு


ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது இங்கிலாந்து அழகி ; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Sep 2020 11:45 AM GMT (Updated: 22 Sep 2020 11:45 AM GMT)

ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது ஒரு இங்கிலாந்து அழகிதான் என ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டி உள்ளது.

மாஸ்கோ

ரஷிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்தது ஒரு இங்கிலாந்து அழகி என்றும், இங்கிலாந்தின் திட்டப்படியே அந்த பெண் செயல்பட்டதாகவும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, விமானத்தில் பயணிக்கும்போது திடீரென சுகவீனமடைந்தார்.அவர் தேநீரில் விஷம்கலக்கப்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டது. 

ரஷியாவின் எதிர்ப்புக்கிடையே ஜெர்மனிக்கு கொண்டுவரபட்ட நவல்னி  அங்கு சிகிச்சை அளீக்கப்படுகிறது. அவருக்கு நோவிச்சோக் என்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது ரஷிய அரசுதான் என்று குற்றம்சாட்டபட்டது. ஆனால் தற்போது ரஷியாவோ புதுக்கதை ஒன்றை சொல்லியிருக்கிறது.

அதாவது, நவல்னி விமானத்தில் பயணிக்கும்போது ஒரு அழகிய இளம்பெண் அவருடன் இருந்ததாகவும், அந்த பெண்தான் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

அத்துடன், இதன் பின்னணியில் இருப்பது இங்கிலாந்து தான் என்றும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது இப்படி ரஷியாவின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அழகி மரியா பெவ்சிக் (33) என்ற பெண் ஆவார்.

அவர் நவல்னியின் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.மரியா முன்பு இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரிடம் பணியாற்றியதாகவும், மரியாவின் தந்தை ஒரு ஊசியை தயாரித்திருப்பதாகவும், அதை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் விஷத்தை உடலில் செலுத்திவிடலாம் என்றும் தொடர்ச்சியாக அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ரஷியா, இங்கிலாந்தில் வாழும் மரியாவை விசாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

ரஷியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு முன் நேரடியாகவே ரஷியாவை தாக்கியுள்ள மரியா, ரஷியா நவல்னியைக் கொல்ல முயன்றது என்றும், இப்போது அதை மூடி மறைப்பதற்காக விஷயத்தை திசை திருப்புவதாகவும் தெரிவிக்கிறார்.

தான் இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரிடம் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து பேசிய மரியா,10 ஆண்டுகளுக்கு முன், தான் ஒரு மாணவியாக இருந்தபோது, அவரிடம் ஒரு இன்டெர்ன் ஆகத்தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் தன் பெற்றோர் விவாகரத்து செய்தபின் சுமார் 10 ஆண்டுகளாக தன் தந்தையை சந்திக்கவேயில்லை என்றும் கூறியுள்ளார் மரியா.

இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் முன்னேறி வரும் நவல்னி, மருத்துவமனையில் தன் அறை முன்பு உள்ள பால்கனியில் தன் மனைவியுடன் அமர்ந்து தேநீர் அருந்தும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


Next Story